Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

கோயம்புத்தூரில் பட்டியலின பள்ளி மாணவியை வகுப்பறை வாசலில் தேர்வு எழுத வைத்த விவகாரம் – தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்..!


கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுக்கா வரதனூர் பஞ்சாயத்தில் உள்ள செங்குட்டைபாளையம் சிற்பவானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 8 -ம் வகுப்பு படித்து வரும் பட்டியலின மாணவி ஒருவர் கடந்த 5 ஆம் தேதி பூப்படைந்ததாகத் தெரிகிறது. மேலும் மாணவிக்கு இப்போது முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 7 ஆம் தேதி ( திங்கள்கிழமை ) பள்ளி தேர்வு எழுதச் சென்ற மாணவியைப் பூப்படைந்ததைக் காரணம் காட்டி, பள்ளி நிர்வாகத்தினர் வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வெளியே வாசலில் அமர வைத்துத் தேர்வு எழுத வைத்துள்ளனர்.

சுமார் 2.30 மணி நேரம் வாசலில் அமர்ந்த படி தேர்வு எழுதிய மாணவி, கால் வலி ஏற்பட்டது தொடர்பாகத் தனது தாயிடம் கூறியுள்ளார். இந்நிலையில் 9 ஆம் தேதி ( புதன்கிழமை) மீண்டும் மாணவி தேர்வு எழுதச் சென்ற போது பள்ளிக்குள் அனுமதிக்காமல் வகுப்பறை வாசல் படிக்கட்டிலேயே தேர்வு எழுதக் கூறியுள்ளனர். இது குறித்து விசாரிக்க மாணவியின் பெற்றோர் பள்ளிச் சென்ற போது மாணவி வகுப்பறைக்கு வெளியே அமர வைத்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் அதனை வீடியோவாக பதிவு செய்த நிலையில், இது குறித்து பள்ளி நிர்வாகத்தினரிடம் பெற்றோர்கள் கேட்ட போது, “இது ஒரு பிரச்சனையா?” எனக் கேட்டுள்ளனர்.

பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை.


இந்நிலையில் மாணவி வகுப்பறை வாசலில் அமர வைத்துத் தேர்வு எழுத வைத்த வீடியோ இணையத்தில் வைரலானது, இது குறித்து விசாரிக்கத் தமிழ்நாடு மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குநர் ஏ.பழனிச்சாமி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மெட்ரிக்குலேசன் மாவட்ட கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார். மேலும் இச்சம்பவம் போலத் தமிழகத்தில் எந்த பள்ளியிலும் நடக்கக்கூடாது என தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் புனித அந்தோனியம்மாள் சம்மந்தப்பட்டப் பள்ளிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவி, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதே போலப் பொள்ளாச்சி சரக உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் தலைமையிலான போலீசாருக்கு பள்ளி நிர்வாகத்தினரிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

பள்ளித் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்.


இதனிடையே கிணத்துக்கடவு சுவாமி சிற்பவானந்தா மெட்ரிக் பள்ளி தாளாளர் சார்பில் மெட்ரிக்குலேசன் பள்ளி மாவட்ட கல்வி அலுவலருக்குக் கடிதம் கொடுத்துள்ளார். அதில் பள்ளியில் தலைமை ஆசிரியை ஆனந்தி தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கருத்து

இந்த விவகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருப்பதாகவது :
தனியார் பள்ளி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி முதல்வர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை எவ்வகையாயினும் பொறுத்துக்கொள்ள முடியாது. அன்பு மாணவி தனியாக அமரவில்லை, நாங்கள் இருக்கிறோம், இருப்போம் எனத் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும் போது கிணத்துக்கடவு தனியார் பள்ளி விவகாரம் தொடர்பாகக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார்.

இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கோவை நெகமம் காவல் நிலையத்தில் அப்பள்ளியின் தாளாளர் தங்கவேல் பாண்டியன், தலைமை ஆசிரியர் ஆனந்தி மற்றும் உதவியாளர் சாந்தி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!