சாலை சீரமைப்பு பணிக்காகக் கோவை குற்றாலம் மூடல்!
கோவை குற்றாலம் அருவிக்குச் செல்லும் சாலை சீரமைப்பு பணிக்காக நாளை புதன்கிழமை கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
கோயம்புத்தூர் சிறுவாணி சாலை, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோவை குற்றாலம் அருவி, மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக உள்ளது. இங்குக் கோயம்புத்தூர் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறை துவங்க உள்ள நிலையில், கோவை குற்றாலம் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக பல்வேறு சீரமைப்பு பணிகளை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சாடிவயல் பகுதியிலிருந்து கோவை குற்றாலம் செல்லும் வழியில் சாலை சீரமைப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. இதன் காரணமாகப் புதன்கிழமை கோவை குற்றாலம் மூடப்படுவதாக போளூவாம்பட்டி வனத்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் சுற்றுலாப் பயணிகள் யாரும் கோவை குற்றலாம் அருவிக்குக் குளிக்க வர வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து வியாழக்கிழமை வழக்கம் போல் கோவை குற்றாலம் செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது