வீர தீர சூரன் படத்தின் ப்ரோமோஷன் – ஆடி பாடி ரசிகர்களை மகிழ்வித்த விக்ரம், துஷாரா
இன்று வெளியாக உள்ள வீர தீர சூரன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கோயம்புத்தூர் சரவணம்பட்டியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதில் படத்தின் கதாநாயகன் விக்ரம் மற்றும் கதாநாயகி துஷாரா ஆகியோர் ரசிகர்களுடன் கலந்துரையாடியதுடன் ஆடி பாடி மகிழ்ந்தனர்..
நடிகர் சீயான் விக்ரம், எஸ் ஜே சூர்யா மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நடிப்பில் வீர தீர சூரன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.இந்த நிலையில் அப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கோயம்புத்தூர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள ப்ரோசோன் வணிக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஏராளமான ரசிகர்கள் அங்குத் திரண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த நடிகர் விக்ரம் மற்றும் நடிகை துஷாரா ஆகியோர் மேடையில் தோன்றி ரசிகர்களுடன் கலந்துரையாடினர்.ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்த விக்ரம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு ஜனரஞ்சகமான மசாலா படம் தனது நடிப்பில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் பேராதரவு தந்து படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
மேலும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்வித்தார்.தொடர்ந்து அப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இரண்டு பாடல்கள் ஒளிபரப்பப்பட்ட நிலையில் ரசிகர்களுடன் அமர்ந்து திரையில் அதனைக் கண்டு ரசித்த விக்ரம் மற்றும் துஷாரா ஆகியோர் பின்னர் மேடையில் பாடலுக்கு நடனமாடியும் ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்….