கோயம்புத்தூரில் சிறப்பு உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை!
கோவை பயங்கரவாத தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சொக்கலிங்கம், வ.உ.சி மைதானத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (54). இவர் கோவைப்புதூரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். மேலும் கடந்த ஆகஸ்ட் 2024 -ல் இருந்து கோவை பயங்கரவாத தடுப்பு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் ரேஸ்கோர்ஸ் பீட் போலீசார் ரோந்து சென்ற போது, கோவை வ.உ.சி மைதானத்தில் உள்ள புங்கைமரத்தில் சேலையால் சிறப்பு உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார் உடற்கூறு ஆய்வுக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.