Uncategorized

கோவையில் ரயில் – யானை மோதலை தடுக்க செயற்கை நுண்ணறிவு கட்டுப்பாட்டு அறை – ஓராண்டில் 2,500 முறை பாதுகாப்பாக தண்டவாளத்தை கடந்த யானைகள்…! 

தமிழக – கேரளா எல்லையான வாளையாறு – மதுக்கரை இடையே  சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவு வனப்பகுதி வழியாக கேரளா செல்லும் ரயில் பாதை அமைந்துள்ளது. இதில் ஏ மற்றும் பி என்ற இரு வழி பாதைகளில் பயணிகள் ரயில், சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக எட்டிமடை – வாளையாறு இடையே 2 கிலோ மீட்டர் ரயில்பாதை அடர் வனப்பகுதிக்குள் செல்கிறது.  இந்நிலையில் அடிக்கடி வாளையாறு அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி வரும் காட்டு யானைகள் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வந்தது.

குறிப்பாக மதுக்கரை – வாளையாறு ரயில்வே தடத்தில் மட்டும் கடந்த 2008 முதல் 2022 வரை 11 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளது. தொடர்ந்து யானைகள் ரயில் மோதி உயிரிழந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணையை துவங்கியது. மேலும் நீதிபதிகள் நேரடியாக மதுக்கரையில் இருந்து வாளையாறு வரை ரயிலில் பயணம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டு ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து நேரில் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் பாலக்காடு ரயில்வே கோட்டம் மற்றும் வனத்துறையினர் இணைந்து பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டனர். அப்போது யானைகள் வழக்கமாக கடந்துச் செல்லும் இடத்தில் சுரங்கபாதைகள் அமைக்க முடிவு செய்தனர். முதல் கட்டமாக ரயில்வே தண்டவாளம் அருகே சோலார் மின் விளக்கு, ஒளி எழுப்பி, கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டது. மேலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அந்த பகுதிகளில் ரயில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரண்டு சுரங்க பாதைகள் அமைக்க ஒன்றிய அரசின் ஒப்புதல் பெறப்பட்டது. அந்த இரண்டு ரயில்வே பாதைகள் கட்டுமான பணிகளும் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்தது.  அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்த போது,  காட்டு யானைகள் அந்த சுரங்கபாதையை பயன்படுத்த துவங்கியது தெரியவந்தது.

நிரந்தர தீர்வுக்கு செயற்கை நுண்ணறிவு:

இந்நிலையில் ரயில் மோதி யானை உயிரிழப்பதை முற்றிலுமாக தடுக்க தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பில்  செயற்கை நுண்ணறிவு முறையில் கண்காணிக்க திட்டமிடப்பட்டது. ரூ.7.25 கோடி மதிப்பீட்டில்  வாளையாறு – மதுக்கரை ரயில்வே தண்டவாளம் வனத்தை ஒட்டிய பகுதிகளில் 12 இடங்களில் சுமார் 80 அடி உயரத்தில் கோபுரம் அமைக்கப்பட்டு அதில் அதிநவீன செயற்கை நுண்ணறிவு  கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதற்கான பிரத்தியேக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அங்கிருந்து வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டு யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வன விலங்குகள் கண்காணிக்கபடுகிறது. காட்டு யானை ரயில்வே தண்டவாளம் அருகே வரும் போது தானியங்கி முறையில் வனத்துறை மற்றும் ரயில்வே துறையினருக்கு நேரடியாக குறுஞ்செய்தி மூலமாக தகவல்களை அனுப்புகிறது. அதே போல கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு ரயில் வரும் வேகமும் துல்லியமாக கணிக்கப்படுகிறது.

இதற்காக நவீன கணினிக்கு யானையின் உயரம், அகலம், உடல் அமைப்பு, நடக்கும் வேகம் என அனைத்தையும் துல்லியமாக கண்காணிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பகல் மற்றும் இரவு நேரங்களில் மிக துல்லியமாக கண்காணிக்கும் வகையிலான கேமராக்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு இயக்கவும் முடியும். மேலும் சிறுத்தைகள், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் மட்டுமின்றி அடர் வனப்பகுதிகளுக்குள் மனித நடமாட்டம் இருந்தாலும் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு அலார்ட் ஒலி எழுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொழில் நுட்பத்தை கடந்த பிப்.2024 ல் அப்போதைய வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ ஆகியோர் திறந்து வைத்தனர். தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஓராண்டில் மட்டும் 2,500 முறை காட்டு யானைகள் பத்திரமாக ரயில்வே தண்டவாளங்களை கடந்துள்ளது. இதன் மூலம் யானை – ரயில் மோதல் தடுப்பு நடவடிக்கையில் செயற்கை தொழில் வெற்றி பெற்றுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கட்டுப்பாட்டு அறையில் பணியாற்ற உள்ளூர் பழங்குடி கிராம வனத்துறை பட்டதாரி ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு பணியாற்றி வருவதும் குறிப்பிடதக்கது. மேலும் தடாகம் பகுதியிலும் வன எல்லையில் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட செயற்கை நுண்ணறிவு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 

இது குறித்து சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கூறும் போது : 

ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க செயற்கை நுண்ணறிவு முறையை பயன்படுத்தும் வனத்துறைக்கு  பாராட்டுகள். இதே போல அடர் வனப்பகுதிக்குள் செல்லும் ரயில்வே தண்டவாளத்தை வனத்தை ஒட்டிய பகுதிக்கு மாற்றியமைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இதே போல கோவை, போளுவாம்பட்டி வனச்சரகங்களிலும் காட்டு யானைகள் – மனித மோதலை தடுக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்த ஆலோசிக்க வேண்டும்  என கோரிக்கையை வைத்துள்ளனர்.

It is a long established fact that a reader will be distracted by the readable content of a page when looking at its layout.

– Cheyenne George

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!